Wednesday, October 21, 2009

கலீபாவிற்கு உரிய நிபந்தனைகள் : شروط الخليفة

கலீபாவாக தேர்வுசெய்ய்ப்படும் நபருக்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் இருக்கவேண்டும். இந்த ஏழு தகுதிகளும் அடிப்படை தகுதிகளாகும். இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அவர் கலீபாவாக ஆகமுடியாது.
1. அவர் முஸ்லிமாக இருக்கவேண்டும், முஸ்லிமல்லாத ஒருவரை கிலாபத்தின் தலைமை பொறுப்புக்கு ஒருபோதும் நியமனம் செய்யமுடியாது ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
மூ*மின்கள் மீது (ஆதிக்கம் செலுத்துவதற்கு) அல்லாஹ் காபிர்களுக்கு எந்த வழியையும் ஆக்கமாட்டான். (4:141)
ஆட்சிஅதிகாரம் என்பது ஆட்சிபுரியப்படும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் பிரயோகிக்கும் பலமான ஆயுதமாகும், இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள லன் என்ற வார்த்தை கா*பிர்கள் ஆட்சிஅதிகாரத்தை கையில் வைத்திருப்பதற்கு இருக்கும் திட்டவட்டமான நிரந்தர தடையை குறிக்கின்ற கரீனாவாக (Indicator)(قرينة) இருக்கிறது, காபிர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இத்தகைய ஆட்சிப்பொறுப்பு கலீபா பதவிக்கும் மட்டுமல்ல அது மற்ற எல்லாவகையான ஆட்சிஅதிகாரத்திற்கும் பொருந்தக்கூடியது.
2. கலீபா பதவிக்கு வருபவர் ஆணாக இருக்கவேண்டும், ஆகவே எந்த சூழலிலும் பெண்கள் கலீபா பதவிக்கு வரமுடியாது. ஏனெனில் சட்டரீதியாக அது செல்லுபடியாகாது.
அபூபக்கரா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹ்ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
"ஒட்டகப்போர் நடந்தபோது நான் முஸ்லிம்களுடன் இணைந்து போர்செய்ய சென்ற அந்த நாட்களில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, பாரஸீக நாட்டு மக்கள் கிஸ்ராவின் புதல்வியை பட்டத்து ராணியாக முடிசூட்டிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்வருமாறு கூறினார்கள்.
لن يفلح قوم ولو أمرهم امرأة
"பெண் ஒருவர் ஆட்சியாளராக இருக்கும் பட்சத்தில் அந்த சமூகம் ஒருபோதும் வெற்றி பெறாது"
பெண்கள் ஆட்சிப்பொறுப்பு வகிப்பதற்,கு அனுமதியில்லை என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது, இதன் சொற்றொடர் ஒரு கோரிக்கையின்(طلب-command) வடிவத்தில் இருக்கின்ற காரணத்தால் பெண்களை ஆட்சிப் பொறுப்புக்கு நியமிப்பதற்கு இதில் கடும்கண்டனம் அடங்கியிருப்பதோடு அதற்குரிய திட்டவட்டமான தடையையும் இது குறிக்கிறது, ஹதீஸின் சொற்றொடரில் பெண்கள் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதற்கு உறுதியாக தடைவிதிக்கும் கரீனா இடம் பெற்றிருப்பதால் பெண்களை ஆட்சிஅதிகாரத்திற்கு நியமனம் செய்வது ஹராமாகும், ஆகவே பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வருவதை தடைசெய்யும் பொதுவான ஆதாரம் இந்த ஹதீஸில் இருப்பதால் இந்தத்தடை கிலாபா பொறுப்புக்கும் மற்ற அனைத்து வகையான ஆட்சிப்பொறுப்புக்கும் பொருந்தக்கூடியதே.
3. கலீபா பதவிக்கு வருபவர் வயதுவந்தவராக இருக்கவேண்டும், கிலாபத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் நபர் சிறுவராக இருப்பதற்கு அனுமதியில்லை.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அலீ இப்ன் அபூதாலிப் (ரலி) அறிவித்திருப்பதாவது.
رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يكبر وعن المبتلى حتى يعقل
"மூன்று வகையினர் மீது (அல்லாஹ்வின்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிடுகிறது : உறக்கத்தில் இருப்பவர் விழித்தெழும்வரை. சிறுவறாக இருப்பவர் பருவவயதை அடையும்வரை. புத்திசுவாதீனம் இல்லாதவர் அறிவாற்றல் பெறும்வரை"
ஆகவே எவர்மீது அல்லாஹ்(சுபு) வின் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டதோ அவர் தன்னுடைய விவகாரங்களை தானே நடத்திச் செல்லமுடியாது. எனவே அவர் சட்டப்படி பொறுப்புள்ளவராக (முகல்லfப்) ஆகமுடியாது, இதனடிப்படையில் அவர் கலீபா பதவிக்கோ அல்லது வேறெந்த ஆட்சிப்பொறுப்புக்கோ சட்டரீதியாக வரமுடியாது. தனது சொந்த விவகாரங்களை நடத்திச் செல்வதற்கு சட்டரீதியான உரிமை அவருக்கு கிடையாது எனும்போது மற்றவர்கள் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் எவ்வாறு ஏற்கமுடியும்?
அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் என்ற சிறுவரின் பைஅத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள் என்ற ஹதீஸ் அறிவிப்பு சிறுவர்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வரமுடியாது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் பைஅத் கொடுப்பதற்கு தகுதியில்லாத ஒருவர் கலீபாவாக நியமனம் பெறுவதற்கு பைஅத் பெறமுடியாது.
4. அவர் புத்திசுவாதீனம் உள்ளவராக இருக்கவேண்டும், புத்திசுவாதீனம் இல்லாத ஒருவரை கலீபாவாக நியமிப்பதற்கு அனுமதியில்லை
... وعن المبتلى حتى يعقل
ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எழுதுகோல் உயர்த்தப்பட்டவர்களில் புத்திசுவாதீனம் இல்லாதவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள், இவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நடத்திச்செல்வதற்கு ஆற்றல் பெறாதவர்கள் என்ற அடிப்படையில் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கலீபா பதவியை வகிக்கமுடியாது.
5. அவர் நீதிசெலுத்தும் மனிதராக இருக்கவேண்டும், கலீபா பொறுப்புக்கு வருபவர் பாவியாக (fபாஸிக்) இருக்க முடியாது. கலீபா பதவிக்கு வருவதற்கும் அதில் தொடர்ச்சியாக இருப்பதற்கும் நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். ஏனெனில் அல்லாஹ்(சுபு) சாட்சியம் அளிப்பவர்கள் நீதிசெலுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறான்,
وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ
உங்களிலுள்ள நிதிசெலுத்துபவர்கள் சாட்சியம் அளிக்கட்டும்…… ( அத்தலாக் 65 : 2)
ஆகவே சாட்சி பகர்வதற்கு நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும்போது கலீபாவாக நியமனம் செய்யப்படுபவர் நீதிசெலுத்தும் பண்பை பெற்றிருக்கவேண்டும் என்பது மிக அவசியமாகும்.
6 அவர் சுதந்திர மனிதராக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கும் மனிதர் தன்னுடைய எஜமானருக்கு உரிய சொத்தாக இருக்கிறார். ஆகவே அவர் தன்னுடைய விவகாரங்களை தன் விருப்பப்படி நடத்திச் செல்வதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ பெற்றவர் அல்ல. னவே அவருக்கு மற்றவர்களின் விவகாரங்களை நடத்திச் செல்வதற்கு அதிகாரம் கிடையாது, இதனடிப்டையில் அடிமையாக இருக்கும் ஒருவர் மக்களை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை வகிக்கமுடியாது.
7. அவர் திறன் பெற்றவராக இருக்கவேண்டும், பைஅத் பெறும்போது உறுதியளிக்கப்பட்ட கிலாபத்தின் நிபந்தனைகளை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவராக அவர் இருக்கவேண்டும். கிலாபத்தை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனராக அவர் இருக்கக்கூடாது.
கலீபா பதவிக்கு நியமனம் செய்யப்படும் ஒருவர் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் அல்லது பெற்றிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். வையல்லாது கூறப்படும் தகுதிகள் உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்குமாயின் அவைகள் முன்னுரிமை கொடுக்கும் தகுதிகளாக இருக்குமே தவிர அடிப்படை தகுதிகளாக இருக்காது, இது ஏனெனில் கிலாபத் ஒப்பந்தத்திற்கு கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்படும் தகுதிகள் திட்டவட்டமான கோருதலை (طلباً جازماً-decisive command)சுட்டிக்காட்டுகின்ற கரீனாவை பெற்றுள்ள உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களாக இருக்கவேண்டும்.இத்தகைய முறையில் கூறப்படாத ஆதாரங்கள் முன்னுரிமை தகுதிகளை குறிப்பிடுவதாகவே கருதப்படும்.
மேற்குறிப்பிட்ட இந்த ஏழு தகுதிகளைத் தவிர்த்து திட்டவட்டமான ஆதாரங்களின் அடிப்படையில் வேறெந்த தகுதிகளும் அறிவிப்புகளில் இடம் பெறவில்லை. ஆகவே இந்த ஏழு தகுதிகள் மட்டுமே கலீபாவாக நியமனம் செய்யப்படுபவருக்கு கட்டாயம் இருக்கவேண்டிய தகுதிகளாகும். உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்படும் மற்ற தகுதிகள் முன்னுரிமை பெறுவதற்குரிய தகுதிகளாகும், ஆகவே கிலாபத் ஒப்பந்தத்திற்கு தேர்வுசெய்யப்படுபவர் முஜ்தஹிதாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையில்லை. ஏனெனில் இதற்கு திட்டவட்டமான ஆதாரம் இல்லை என்பதோடு கலீபாவின் கடமை ஆட்சிபுரிவதே அல்லாமல் இஜ்திஹாது மேற்கொள்வதல்ல. ஏனெனில் அவர் ஒரு முஜ்தஹிதிடம் ஹுகுமை அறிந்துகொண்டு அதனடிப்படையில் இறைசட்டங்களை ஏற்றுஅமல்படுத்தமுடியும். ஆகவே அவர் ஒரு முஜ்தஹிதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எனினும் அவர் ஒரு முஜ்தஹிதாக இருக்கும்பட்சத்தில் அது முன்னுரிமை பெறும் தகுதியாக இருக்கும். மேலும் கலீபாவாக தேர்வுசெய்யப்படுபவர் வீரதீரம் மிக்க மனிதராக இருக்கவேண்டும் என்பதோ அல்லது உம்மத்துடைய விவகாரங்களை நடத்திச்செல்வதற்கும் அதன் நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கும் அசாதாரன அறிவாற்றல் பெற்றவராக இருக்கவேண்டும் என்பதோ நிபந்தனையல்ல. இதுஏனெனில் இந்த விவகாரத்தில் ஸஹீஹான ஹதீஸ் அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் கலீபா ஒப்பந்தத்திற்குரிய ஹுகும்ஷரியாவில் இந்த நிபந்தனைகள் இடம்பெறாது. எனினும் கலீபாவாக தேர்வுசெய்யப்படுபவர் வீரதீரம் உள்ளவராகவும் மிகுந்த அறிவாற்றல் பெற்றவராகவும் இருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கலீபாவாக வருபவர் குறைஷ் கோத்திரத்தில் உள்ளவராக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை.
முஆவியா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.
إن هذا الأمر في قريش لا يعاديهم أحد إلاّ كبه الله على وجهه ما أقاموا الدين
"நிச்சயமாக இந்த விவகாரம்(ஆட்சி) குறைஷியர்களிடம் இருக்கிறது, அவர்கள் தீனை நிலைநாட்டும்போது எவரேனும் அவர்களுடன் சர்ச்சை செய்வாராயின் அவர்களை அல்லாஹ் நரகநெருப்பில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான்"
இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
لا يزال هذا الأمر في قريش ما بقي منهم اثنان
"குறைஷியர்கள் இருவர் இருக்கும்வரையில் இந்தவிவகாரம் (ஆட்சி) அவர்களை விட்டும் நீங்காது"
இந்த ஹதீஸ்களும் குறைஷியர்கள் கலீபாவாக இருப்பதுபற்றி அறிவிக்கும் மற்ற ஹதீஸ்களும் கலீபாவாக வருபவர்கள் குறைஷியர்களாக இருக்கவேண்டும் என்ற கோருதலை (طلباً-command) சுட்டிக்காட்டினாலும் திட்டவட்டமான கட்டளை என்பதற்குரிய கரீனாவை பெற்றிருக்கவில்லை என்பதால் அவை தகவல் அளிக்கும் வகையில் உள்ள செய்தியாகும். இந்த தகவல் அளிக்கும் சொற்றொடர் திட்டவட்டமான கரீனாவை பெற்றிருக்கவில்லை. ஆகவே இந்த ஹதீஸ் கலீபாவாக வருபவர் குறைஷியராக இருப்பதற்கு உரிய பரிந்துரையை சுட்டிக்காட்டுகிறதே தவிர கட்டாயம் என்று அறிவிக்கவில்லை. இதனடிப்படையில் இது ஒரு முன்னுரிமை அளிக்கும் நிபந்தனையாக இருக்கிறதே தவிர ஒப்பந்தத்திற்குரிய கட்டாய நிபந்தனையாக இல்லை. எவரேனும் அவர்களுடன் சர்ச்சை செய்வாராயின் அவர்களை அல்லாஹ் நரகநெருப்பில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான் என்ற அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) வார்த்தையைப் பொறுத்தவரை குறைஷியருடன் பகைமை பாராட்டுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறதே தவிர ஆட்சிபுரியும் உரிமை குறைஷியர்களுக்கு மட்டும் உரியது என்று கூறவில்லை. மேலும் உஸþல் பிக்ஹ் சொல் இலக்கணத்தின் அடிப்படையிலும் ஆட்சிபுரிதல் குறைஷியர்களுக்கு உரியது என்ற அர்த்தத்தை இந்த ஹதீஸ் அறிவிப்பிலிருந்து எடுக்கமுடியாது.
ஆகவே இந்த ஹதீஸ் அறிவிப்புகள் ஆட்சிபுரிதல் குறைஷியர்களுக்கு உரியது என்றோ அல்லது குறைஷியர்களிடம் மட்டுமே அது இருக்கவேண்டும் என்றோ அல்லது மற்றவர்கள் கலீபா பொறுப்புக்கு வருவது சட்டத்திற்குப் புறம்பானது என்றோ குறிப்பிடவில்லை. மாறாக, ஆட்சிபுரிதல் குறைஷயர்களிடம் இருக்கிறது என்றும் அதற்கு அவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் அதேசமயத்தில் அது மற்றவர்களிடம் இருப்பதும் சட்டரீதியானதே என்ற அர்த்தத்தைதான் கொடுக்கின்றன. இவ்வாறாக குறைஷியர்களைப் பற்றிய இந்த ஹதீஸ் அறிவிப்பு மற்றவர்கள் கலீபாவாகவோ அல்லது வேறெந்த ஆட்சியாளர்களாகவோ வருவதை தடுக்கவில்லை. இதனடிப்படையில் இது குறைஷியர்களுக்கு ஆட்சிபுரிதலில் முன்னுரிமை கொடுக்கக்கூடிய நிபந்தனையாக இருக்கிறதே தவிர ஒப்பந்தத்திற்குரிய கட்டாய நிபந்தனையாக இல்லை.
மேலும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) குறைஷியர்களில் இல்லாத அப்துல்லாஹ் இப்ன் ரவாஹா(ரலி). ஸைது இப்ன் ஹாரிதா(ரலி) மற்றும் உஸாமா இப்ன் ஸைது(ரலி) ஆகியோரை அமீராக நியமனம் செய்திருக்கிறார்கள், ஆகவே குறைஷியர் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின்தூதர்(ஸல்) இமாரத்தை கொடுத்திருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள இந்தவிவகாரம் என்ற சொல் அதிகாரம் – authority என்று பொருள்படுமே தவிர கிலாபத் என்ற அர்த்தத்தை மட்டும் குறிக்காது. எனவே அல்லாஹ்வின்தூதர்(ஸல்) குறைஷியர் அல்லாதவர்களை ஆட்சிபொறுப்பில் நியமித்துள்ளார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் குறைஷியர் அல்லாத மற்றவர்கள் ஆட்சிபுரியும் அதிகாரத்தை அடைந்துகொள்வதற்கு தடையேதும் இல்லை என்பதற்கு இது ஆதாரமாக இருக்கிறது.ஆகவே இந்த ஹதீஸ் கிலாபத்திற்கு தகுதியுடைய சில மக்களை சுட்டிக்காட்டி அவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.
اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة
"உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையை உடைய ஹபஷாவின்(அபிஸீனியா) அடிமை (அமீராக இருந்து) உங்கள்மீது ஒரு செயலை ஏவினாலும் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அபூதர்(ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
أن أسمع وأطيع وإن كان عبداً مُجدَّع الأطراف أوصاني خليلي
தட்டையான மூக்கும் தடித்த உதடுகளும் கெண்ட அடிமை (அமீராக இருந்ததார்) என்றாலும் அவருக்கு செவிமடுக்கவேண்டும் என்றும் கட்டுப்படவேண்டும் என்றும் எனது தோழர் (இறைத்தூதர்-ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள்"
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
إن أُمّر عليكم عبد مُجدَّع أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا
"தட்டையான மூக்குடைய கருப்பு அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழிநடத்தினால் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"
இந்த ஹதீஸ்களின் அறிவிப்புகள் குறைஷியர்களோடு மட்டுமோ அல்லது அரபுகளோடு மட்டுமோ கிலாபத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற அடிப்படையில் மற்றவர்கள் அதை ஏற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.
மேலும் கலீபாவாக வருபவர் ஹாஷிமீ (Hashimite- ஹாஷிம் குடும்பத்தைச் சார்ந்தவர்) அல்லது அலவீ (Alawite –அலீ (ரலி) யின் குடும்பத்தைச் சார்ந்தவர்) ஆகிய வம்சாவழியை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நிபந்தனையல்ல. ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பனூஹாஷிம். பனூஅலீ ஆகியவர்களில் இல்லாதவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுத்துள்ளார்கள் என்ற திட்டவட்டமான அறிவிப்புகள் உள்ளன. மேலும் தபூக் படையெடுப்பிற்கு மதீனாவை விட்டு அவர்கள்(ஸல்) சென்றபோது முஹம்மது இப்ன் மஸ்லமாவை(ரலி) மதீனாவின் ஆட்சியாளராக நியமனம் செய்துள்ளார்கள். இவர் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் முஆத் இப்ன் ஜபல்(ரலி) அம்ர் இப்ன்ஆஸ்(ரலி) ஆகியோர்களை எமன் பிரதேசத்திற்கு ஆட்சியாளர்களாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நியமனம் செய்துள்ளார்கள். இவர்கள் எவரும் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு முஸ்லிம்கள் கிலாபத்திற்குரிய பைஅத் செய்தார்கள் என்றும் இவர்கள் ஒவ்வொருவரும் பனூஹாஷிமாக இல்லாதபோதும் அலீ(ரலி) இவர்களுக்கு பைஅத் செய்தார் என்றும் திட்டவட்டமான அறிவிப்புகள் கூறுகின்றன. இவர்கள் கிலாபத் பொறுப்பை ஏற்றபோது அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்து பைஅத் செய்தார்கள் என்றும் ஒருவர்கூட இவர்கள் பனூஹாஷிமாக அல்லது பனூஅலீயாக இல்லை என்பதற்காக பைஅத் செய்வதற்கு மறுக்கவில்லை என்றும் உறுதியான அறிவிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே பனூஹாஷிமாக (ஹாஷிமீ) அல்லது பனூஅலீயாக (அலவீ) இல்லாதவர்களும் கலீபாவாக வருவதற்கு அனுமதி உண்டு என்ற இந்த ஆதாரம் இஜ்மாஅஸ்ஸஹாபாவில் உள்ளதாகும். இந்த இஜ்மாவில் பனூஹாஷிமான அலீ (ரலி), இப்ன்அப்பாஸ் (ரலி) மற்றும் இதர ஹாஷிம் குடும்பத்தார்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அலீ(ரலி) யின் குடும்ப அந்தஸ்த்து பற்றியும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) குடும்ப அந்தஸ்த்து பற்றியும் கூறும் ஹதீஸ் அறிவிப்புகளைப் பொறுத்தவரை அவை அவர்களுக்கு இருக்கும் முன்னுரிமைத் தகுதிகளை சுட்டிக்காட்டுகின்றனவே ஒழிய கிலாபத்தை அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யவேண்டும் என்ற எந்த நிபந்தகையையும் அவைகள் சுட்டிக்காட்டவில்லை.
இந்த விளக்கங்களின் அடிப்படையில் கலீபாவின் நியமனத்திற்கு மேற்கூறப்பட்ட ஏழு நிபந்தனைகள் மட்டுமே கட்டாயமானவை என்பதும் வேறுநிபந்தனைகள் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும் மற்ற நிபந்தனைகள் யாவும் முன்னுரிமை பெறும் நிபநதனைகளாக மட்டுமே இருப்பவை என்பதும் தெளிவாக விளங்குகிறது. சட்டரீதியாக ஒரு கலீபா ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு இந்த ஏழு ஒப்பந்த நிபந்தனைகள் மட்டுமே நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் அவசியமாகும். இவையல்லாத மற்ற தகுதிகள் பற்றிய அறிவிப்புகள் கிலாபத்திற்குரிய சிறந்த நபரை தேர்வுசெய்வதற்கு முஸ்லிம்களுக்கு வழிகாட்டும் அறிவிப்புகளாகும். மற்ற தகுதிகளை ஒருவர் பெறாதபோதும் ஒப்பந்தத்திற்குரிய தகுதிகளை மட்டும் பெற்றிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் அவரை கலீபாவாக தேர்வுசெய்யும் பட்சத்தில் அவர் சட்டரீதியாக தேர்வு செய்யப்பட்டவர்தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

கிலாபா பதவியை அடைவதற்கு தேடுதல் மேற்கொள்ளுதல் : طلب الخلافة

கிலாபா பொறுப்பை அடைந்துகொள்ள முயற்சி மேற்கொள்வதற்கும் அதற்காக விவாதத்தில் ஈடுபடுவதற்கும் அனைத்து முஸ்லிம்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள், இவ்வாறு செய்வது மஹ்ரூவான செயலல்ல ஏனெனில் இதற்கு மேற்கொள்ளும் போட்டியை தடைசெய்யும் எந்த அறிவிப்புகளும் கிடையாது, அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) உடல் அடக்கம் செய்யப்படாமல் வைகக்ப்பட்டிருக்கும் நிலையில் பனூஸôயிதாவின் புறநகர் பகுதியில் கலீபா பொறுப்பை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பது திட்டவட்டமான அறிவிப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் உமர்(ரலி) மரணத்திற்குப் பின்னர் உயர்ந்த அந்தஸ்த்து பெற்ற ஸஹாபாக்களில் உள்ளவர்களான ஆலோசனை குழுவைச் சார்ந்த ஆறு நபர்கள் மற்ற ஸஹாபாக்கள் முன்னிலையில் கலீபா பதவிக்காக தங்களிடையே தர்க்கம் செய்துகொண்டிருந்தார்கள் என்பதும் இதற்கு எந்தவொரு ஸஹாபாவும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அவர்களுடன் இணக்கமாக இருந்தார்கள் என்பதும் திட்டவட்டமான முறையிலும் உறுதியான வித்திலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஸஹாபாக்களின் இந்த இஜ்மா கிலாபத்திற்காக தர்க்கம் புரிந்துகொள்வதும் அதை அடைந்து கொள்வதற்காக போட்டியிட்டுக் கொள்வதும் அனுமதிக்கபட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது, தலைமைக்குரிய பதவியை வலியுறுத்திக் கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு தடைசெய்யும் ஹதீûஸப் பொறுத்தவரை அது அபூதர் கிfபாரி (ரலி) போன்ற தலைமைத்துவத்திற்கு திறன்பெறாத நபர்களுக்கு குறிப்பாக கூறப்பட்டதே தவிர பொதுவான அறிவிப்பு அல்ல, அதற்கு தகுதியானவர்கள் அதைக் கேட்டு பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு, அம்ர் இப்ன் ஆஸ்(ரலி) தனக்கு தலைமைப் பதவியை (இமாரத்) கோரியபோது அல்லாஹவின்தூதர்(ஸல்) அவரை மாகாண ஆளுநராக (வாலி) நியமனம் செய்தார்கள்.

கிலாபத்தின் ஒருமைத்துவம் : وحدة الخلافة

உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு கலீ*பாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.
அப்துல்லாஹ் இப்ன் அம்ர்இப்ன்ஆஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
ومن بايع إماماً فأعطاه صفقة يده وثمرة قلبه فليطعه إن استطاع، فإن جاء آخر ينازعه فاضربوا عنق الآخر
"எவரேனும் ஒருவர் தமது கரத்தால் கைலாகு(முஸ*பா) கொடுப்பதன் மூலமும் தமது இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஒரு இமாமுக்கு பைஅத் செய்தால் பிறகு அவர் இயன்றவரை கட்டுப்பட்டு நடக்கட்டும், இந்நிலையில் மற்றாருவர் வந்து (அதிகாரத்தில்) அவரிடம் சர்ச்சை செய்தால் அவரது கழுத்தை வெட்டுங்கள்."
அபூஸயீது அல்லகுத்ரி(ரலி) அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
إذا بويع لخليفتين فاقتلوا الآخر منهما
"இரண்டு கலீ*பாக்களுக்கு பைஅத் பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்"
அர*பஜா அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது. அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه
"ஒரு மனிதரின் தலைமையில் (கலீ*பாவின்கீழ்) நீங்கள் ஒன்றுபட்டிருக்கும்போது உங்கள் பலத்தை குறைப்பதற்காகவோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்காகவோ (கலீ*பாவிற்கு போட்டியாக) வேறொருவர் வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்"
அபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அபூஹுரைராவுடன் நான் ஐந்து வருடங்கள் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறறேன் அப்போது அவர் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அறிவித்துள்ளதை செவியுற்றிருக்கிறேன்.
كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثر، قالوا فما تأمرنا قال: فوا، ببيعة الأول فالأول وأعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم
"பனூஇஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒருநபி இறந்தபோது மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பட்டார், நிச்சயமாக. எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் ஆனால் கலீபாக்கள் வருவார்கள் அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், "(அதுகுறித்து) எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள் என்று ஸஹாபாக்கள் வினவினார்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றன்பின் ஒன்றாக பைஅத் கொடுங்கள் அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (பொறுப்பு) பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்."
ஒரே சமயத்தில் வெவ்வேறு இருநாடுகளில் கிலாபத் நிறுவப்பட்டால் அவற்றில் எதுவொன்றும் செல்லுபடி ஆகாது ஏனெனில் முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் இரண்டு கலீ*பாக்களை பெற்றிருப்பதற்கு அனுமதியில்லை, முதலில் பெறப்பட்ட பைஅத் சட்டரீதியானது என்று கூறுவது சரியல்ல ஏனெனில் கிலாபத்தை நிலைநாட்டுவது அவசியமானதே தவிர அதற்காக முறையற்ற போட்டியை ஏற்படுத்துவதற்கு அனுமதியில்லை, ஆகவே இரண்டு கலீபாக்கள் நிலைநிறுத்தப்படும் பட்சத்தில் விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டு செல்லப்பட்டு முறையாக ஒரு கலீபாவை நிலைநிறுத்தவேண்டும், இவ்வாறு நிகழும்போது இருவருக்கிடையில் ஓட்டெடுப்பு நடத்தி ஒருவரை தேர்வுசெய்யவேண்டும் என்று கூறுவது தவறானது ஏனெனில் கிலாபத் என்பது ஒப்பந்தமாகும் எனவே ஓட்டெடுப்பை எவ்விதத்திலும் ஒப்பந்தமாக கொள்ளமுடியாது, அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத் கொடுங்கள் என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூற்றை இங்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் இது ஏற்கனவே கிலா*பத் நிலைநாட்ப்பட்டுள்ள நிலையில் கலீபாவிற்கு பைஅத் கொடுப்பது தொடர்பான அறிவிப்பாகும், ஏற்கனவே கிலாபத் நிறுவப்பட்டுள்ள நிலையில் முந்தைய கலீபாவிற்கு பதிலாக மற்றொரு கலீபாவை தோர்வுசெய்யும்போது இரு கலீபாக்கள் பைஅத் பெற்றால் முதல் நபரின் பைஅத் ஏற்றுக் கொள்ளப்பட்டு கிலாபத் ஒப்பந்தம் அவர்மீது நிறைவேற்றப்படும். இரண்டாவது நபர் பெற்ற பைஅத் செல்லுபடி ஆகாது, ஆனால் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கும் விவகாரம் அதுவல்ல. ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாமல் இருக்கும்நிலையில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இரண்டு இடங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களால் பைஅத் செய்யப்பட்டு இருநபர்களுக்கு கிலாபத் ஒப்பந்தம் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையாகும், இத்தகைய தருணத்தில் இரண்டு ஒப்பந்தங்களுமே ரத்து செய்யப்பட்டு விவகாரம் மறுபடியும் முஸ்லிம்களிடம் கொண்டுவரப்படவேண்டும், முஸ்லிம்கள் இவர்கள் இருவரில் ஒருவருக்கு புதிதாக பைஅத் கொடுத்து ஒப்பந்தம் செய்வர்களேயானால் அது புதிய ஒப்பந்தமாக கருதி சட்டரீதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் அது பழய ஒப்பந்தத்தை புதுப்பித்ததாக கருதப்படமாட்டாது, அவ்வாறு இல்லாமல் இவ்விரு நபர்களையும் விடுத்து வேறொரு நபருக்கு கிலாபத் ஒப்பந்தத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றும் பட்சத்தில் அதுவும் சட்டரீதியானதே, ஆகவே இந்த விவகாரம் முஸ்லிம்களின் உரிமையை பிரயோகித்து தீôக்கப்படுமே ஒழிய கலீபா பதிவிக்கு போட்டியிடும் நபர்களின் தகுதியையோ அல்லது செல்வாக்கையோ அல்லது உரிமையையோ அடிப்படையாக வைத்து தீர்க்கப்படாது, அதேபோல ஏற்கனவே கிலாபத் நிறுவப்படாதநிலையில் ஒரு பிரதேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கலீபாக்கள் தேர்வுசெய்யப்படும் பட்சத்தில் ஒருவருக்கு செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்து மற்றவருக்கு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் சிறுபான்மை ஆதரவு மட்டும் இருக்குமாயின் அப்போது பெரும்பான்மை ஆதரவு பெற்ற நபருக்கே கிலா*பத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அவர் முதலாவதாக அல்லது இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக தேர்வு செய்யபட்டிருப்பினும் சரியே, ஏனெனில் ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வுசெய்யும் நபரே கலீபாவாக கருதப்படுவார், கலீ*பா பதவிக்கு போட்டியிட்ட மற்ற நபர்கள் கிலாபத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொருட்டு கலீபாவாக நியமனம் செய்யப்பட்டவருக்,கு பைஅத் கொடுக்கவேண்டும், அவர்கள் அதற்கு மறுக்கும் பட்சத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக போர்செய்யவேண்டும் ஏனெனில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஒப்பந்தம் செய்வது மூலமாகத்தான் கிலாபத் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும், இவ்வாறு கலீ*பாவாக நியமனம் செய்யப்படும் ஒருவருக்கு முஸ்லிம்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதோடு இதன்பின்னர் மற்றொரு நபரை கலீ*பாவாக தேர்வுசெய்ய முயற்சித்தால் அது ஹராமாகும்.
எனினும் ஆட்சியமைப்பு (ruling system – nidaamul hukm) விவகாரங்களில் நிலவும் உண்மைநிலைகளை கவனிக்கும் போது ஆட்சியமைப்பு விவகாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள முஸ்லிம்கள் வழக்கமாக தலைநகரங்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் ஏனெனில் அங்குதான் ஆட்சியமைப்பு விவகாரங்களின் உச்சகட்டமான செயல்பாடுகள் நடந்துவருகின்றன, தலைநகரில் ஒருவர் கலீபாவாக தேர்வு செய்யபட்ட நிலையில் மாகாணங்களின் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மற்றொருவரை கலீபாவாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தலைநகரத்தில் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டவர் முதலில் பைஅத்தை பெற்றுவிட்டால் பிறகு தலைநகரில் பைஅத் பெற்ற நபர்தான் கலீபா பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் ஏனெனில் தலைநகரில் உள்ளவர்கள் பைஅத் செய்வது செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் மாகாணங்களில் ஒருவர் கலீபாவாக முதலில் தேர்வு செய்யப்பட்டு செல்வாக்கு பெற்ற முஸ்லிம்களிடம் பைஅத் பெரும் பட்சத்தில் அவருக்கே கிலாபத் ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் ஏனெனில் இதுபோன்ற தருணங்களில் மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் பைஅத் செய்வதில் முன்னிலை பெற்றுவிடுவதால் தலைநகரில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் நிலை பலவீனம் அடைந்துவிடுகிறது, எவ்வாறு இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கலீபாவிற்கு மேல் இருப்பதற்கு அனுமதியில்லை.